மத்திய, மாநில அரசுகள், கல்வி வளர்ச்சிக்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழக அரசை பொறுத்தமட்டில், பள்ளிக்கூட கல்வித்துறையையும், உயர் கல்வித்துறையையும், தன் இருகண் களாகக் கொண்டு செயல்படுகிறது. எப்படி இரு தண்டவாளங்கள் ஒரே திசையில், ஒன்றாக போடப்பாட்டால்தான், ரெயில் தங்குதடையின்றி வேகமாகச்செல்ல முடியுமோ, அதேபோலத்தான், பள்ளிக்கூட கல்வி–உயர்கல்வி, இரண்டின் முன்னேற்றத்தில்தான் நாட்டின் வளர்ச்சி வேகமாக செல்லும் என்பது, அரசின் சீரிய எண்ணமாகும். கட்டாய கல்வி சட்டத்தில்கூட, இலவசக்கல்வி ஒரு அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. பணம் கட்டிப்படிக்கும் பள்ளிக் கூடங்களில் கூட, 25 சதவீத இடங்களை ஏழைகளுக்கு ஒதுக்கி, அதை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிகள் இருக்கிறது. என்னதான் அரசுப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வி அளித்தாலும், அரசின் நிதியுதவி பெறாத பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் கல்வியின் மீது ஆசை கொண்டு, தங்களை வருத்திக்கொள்ளும் நிலையில், ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கிறார்கள்.
கட்டணம் கட்டுவதே கஷ்டமான நிலையிலுள்ள பெற்றோருக்கு, இப்போது மேலும் தாங்கமுடியாத கஷ்டத்தை உருவாக்கும் வகையில், பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு சேவைவரி விதிக்க, மத்திய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, பல தனியார் பள்ளிக்கூடங்களில் இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ‘சிநாக்ஸ்’ என்று சொல்லப்படும் பிஸ்கெட் மற்றும் சுகாதாரமான ஆரோக்கிய உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு பள்ளிக் கட்டணத்திலேயே, குறைந்த ஒரு கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கிறார்கள். இதுபோல, மாணவர்களை வீடுகளில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு, பஸ் அல்லது வேன் மூலம் அழைத்து செல்வதற்கும், திரும்ப கொண்டுபோய் விடுவதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். சில மாணவர்களுக்கு நீச்சல், டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கிறது. இதுபோல, வயலின், கிட்டார், வீணை போன்ற இசைக் கருவிகள் மீட்டுவதிலும் ஆர்வம் இருக்கிறது. இதுபோன்ற மாணவர்களுக்கு அதற்கான பயிற்சியை, கட்டணம் வசூலித்துக்கொண்டு வழங்குகிறார்கள். படிப்பில் புலிகளாக திகழும் பல மாணவர்களை ‘ஒலிம்பியாட்’ போன்ற தேர்வுகளுக்கு தயார் செய்வதற்கும், அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதுபோல மாணவர்களின் செயல்முறை பயிற்சிக்காக, சுற்றுலா அழைத்து செல்கிறார்கள். இவையெல்லாம் நிச்சயமாக இன்றைய சமுதாயத்தில் மாணவர்களுக்கு தேவையான ஒன்றாகும். ஏற்கனவே இதற்கான கட்டணத்தை பெற்றோர் செலுத்திவிட்ட நிலையில், இதுபோன்று மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதலான சேவைக்கு, மத்திய அரசாங்கம் சேவை வரி விதிக்கப்போகிறது. இப்படி சேவை வரி விதிப்பதால், அந்த பள்ளிக்கூடங்களோ, கல்லூரிகளோ தங்கள் கையில் இருந்து அந்தக்கட்டணத்தை கட்டப்போவதில்லை. நிச்சயமாக மாணவர்களிடம் இருந்துதான் வசூலிப்பார்கள். எனவே, இத்தகைய முடிவுகள் மாணவர்களையும், அவர்களின் பெற்றோரையும்தான் நசுக்கி, அவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் என்பதால், கல்வி நிறுவனங்கள் வழங்கும் இந்த சேவைகளுக்கு மத்திய அரசு சேவை வரி விதிப்பதை கைவிடவேண்டும்.
No comments:
Post a Comment