கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் சேலம் மாவட்டம் ஆசிரியர்
தகுதித்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அங்கு, தேர்வெழுதிய 34,180 பேரில் 1,753 பேர் தேர்ச்சி
பெற்றிருக்கிறார்கள். தகுதித்தேர்வு தேர்ச்சியில் நீலகிரி மாவட்டம் கடைசி
இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம்
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு
முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள
அனைத்து மாநிலங்களிலும் (காஷ்மீர் தவிர) கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு
வந்துவிட்டது.
அரசு பள்ளியோ, அரசு உதவி பெறும் பள்ளியோ, சுயநிதி பள்ளியோ அனைத்து
பள்ளிகளுக்கும் தகுதித்தேர்வு விதிமுறை பொருந்தும். அரசு பள்ளிகளிலும் உதவி
பெறும் பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர
வேண்டுமானால் கண்டிப்பாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கு 5
ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் முதலிடம்
தமிழ்நாட்டில் இதுவரை 3 தகுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. முதல்
தேர்வில் 0.3 சதவீதம் பேரும், 2-வது தகுதித்தேர்வில் 3 சதவீதம் பேரும்
அண்மையில் வெளியான தேர்வில் 4.26 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
முந்தைய தேர்வுகளுடன் ஒப்பிடும்போது, தேர்ச்சி விகிதம் ஏறுவரிசையை நோக்கி
சென்றாலும், அது மிகவும் குறைவுதான்.
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 27,072
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 12,596 பேர் இடைநிலை ஆசிரியர்கள்,
14,496 பேர் பட்டதாரி ஆசிரியர்கள். கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக
கருதப்படும் சேலம் மாவட்டம்தான் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை
பிடித்துள்ளது. அங்கு இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை 13,372 பேர்
எழுதினர்.
கடைசி இடத்தில் நீலகிரி
அவர்களில் 687 பேர் தேர்ச்சி பெற்றனர். அதேபோல், பட்டதாரி ஆசிரியர்
தகுதித்தேர்வை 20,808 பேர் எழுதியதில் 1066 பேர் வெற்றி
பெற்றிருக்கிறார்கள். இரு தேர்வுகளில் சேர்த்து பார்த்தால் 34,180 பேர்
தேர்வு எழுதி, அதில் 1,753 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் இடைநிலை
ஆசிரியர்களுக்கான முதல் தகுதித்தேர்வு தேர்ச்சியில் ஈரோடு மாவட்டம் 2-ம்
இடத்தையும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தகுதித்தேர்வில் தருமபுரி
2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் நீலகிரி மாவட்டம் கடைசி இடத்துக்கு
தள்ளப்பட்டுள்ளது. அங்கு இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வை 1,294 பேர்
எழுதியதியதில் 60 பேரும், பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வை 3,261 பேர்
எழுதியதில் 43 பேரும் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில்
ஒட்டுமொத்தமாக 33,440 தேர்வு எழுதினர். அவர்களில் தேறியவர்கள் வெறும் 780
பேர் மட்டுமே.
No comments:
Post a Comment