scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

September 15, 2013

"ஊர்ல உள்ள எல்லா பய பிள்ளைகளும் படிச்சாகணும்!'

ஆசிரியர்குடும்பம் ஐயாவின் சேவையை வணங்குகிறது. 



 
கோவை மாவட்டம், திம்மராயன்பாளையத்தைச் சேர்ந்த கொதியப்பா- நஞ்சம்மாள் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் டி.கே.ராமசாமி. எழுபத்தைந்து வயதான இவர், முன்னாள் தலைமையாசிரியர்.
இவர், தன், கிராமத்தைச் சேர்ந்த, எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது கைகாசு மட்டுமல்லாமல், கடன் வாங்கி, கல்விக்காக, செலவழித்து வருகிறார்.

தனது கல்விச்சேவை குறித்து அவர் கூறியதாவது: என் அம்மா ஒரு தெய்வமுங்க. அப்போது, ஐந்தாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றாலே, பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கூடம் போக வேண்டும். ஆனாலும், என் அம்மா, " நான்தான் கைநாட்டா போய்விட்டேன் ராசா, நீ அப்படி இருக்கக் கூடாது; நல்லா படிக்கணும். நல்லா படிக்கிறது மட்டுமில்ல, நீ, நாலு பேரை படிக்க வைக்கணும்' என்று, சொல்லிச் சொல்லியே என்னை வளர்த்தார்.
பள்ளிக்கூடம் போவதற்காக, 1952 ல், 52 ரூபாய்க்கு, ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அந்த 52 ரூபாய், கடனை அடைக்க மூணு வருஷம் கஷ்டப்பட்டார். அதிகாலை மூணு மணிக்கு எழுந்து, மாட்டுத்தீவன புல்லை அறுத்து, அலசி எடுத்து, பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து, மேட்டுப்பாளையம் போய் காலணா, அரையணா காசிற்கு விற்று சம்பாதித்த காசில், சைக்கிள் வாங்கிய கடனை அடைத்தார்.
அந்த கஷ்டத்திலேயும், எனக்கு பிடிச்ச கடலை பொரியை வாங்கி, மடியில் கட்டிக்கொண்டு வந்து, கொடுப்பார். நான் சாப்பிடும் அழகை, பார்த்து ரசித்த, என் அம்மாவிற்கு, நான் செலுத்தும் காணிக்கையே, தற்போது, ஏழை மாணவர்களை தேடிப் பிடித்து படிக்க வைப்பது.
பள்ளி ஆசிரியராக, 1961ல் சேர்ந்து, 1998ல், தலைமையாசிரியராக பணி ஓய்வு பெற்றேன். நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், மாணவ,மாணவியரை என் சொந்த பிள்ளைகளாகவும், பள்ளி கூடத்தை என் வீடாகவே பாவித்து வந்தேன். கிராமத்தில் எந்த குழந்தையும் படிக்காமல் இருந்து விடக்கூடாது என்பதில், தீவிரமாக செயல்பட்டேன். பள்ளி மற்றும் அதனை சார்ந்த இடங்களில் மரம் வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டினேன். சிறுமுகை பள்ளியில் பணியாற்றும் போது, நான் வளர்த்த தேக்கு மரங்கள், இன்று, பல லட்சம் பெறும் என்பதை எண்ணும்போது, சந்தோஷமாக இருக்கிறது. விடுமுறை தினங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு, ஊரில்,தெருவில் மரம் நட கிளம்பி விடுவேன். அந்த வகையில், இன்று, இலுப்பம் பாளையம் கிராமம் ஒரு சோலை போல இருக்கிறது என்றால், நானும், என் பிள்ளைகளும், அன்று வைத்த மரங்களே காரணம் என்று சொல்லுவேன்.
நான் படித்து, பணியாற்றி, ஓய்வு பெற்ற இலுப்பம் பாளையம் அரசு பள்ளி தான், எனக்கு சொர்க்கமான இடம். அரசு சார்பில், சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்த போது, அந்த சுவர்களில் தேசிய மலர், தலைவர்கள், விலங்கு மற்றும் மழைநீர் சேமிப்பின் அவசியம், மரங்களின் முக்கியம் போன்றவைகளை, முப்பதாயிரம் ரூபாய் செலவழித்து, ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன். இதை, தினமும் பார்க்கும் குழந்தைகள் மனதில், நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும்.
கடந்த, 98ல், பணி ஓய்வு பெற்ற பிறகு, சமூகப்பணியாற்றுவதில் தீவிரமாக இறங்கினேன். என் பென்ஷன் பணம் 17 ஆயிரத்தில், எனக்கும்,என் மனைவிக்குமான குடும்ப செலவிற்கு, மாதம் ஆறாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு, மீதம் 11 ஆயிரம் ரூபாயை, பொதுக்காரியத்திற்கு செலவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளேன்.
அதிலும், பெரும்பகுதி பணத்தை, கிராமத்து பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வாங்குவதற்கு செலவு செய்து விடுவேன். பள்ளி ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் கூடுதலாக செலவாகும். அதைப்பற்றி கவலைப்படாமல், கடன் வாங்கி செலவழித்து, அப்புறம் பென்ஷன் பணம் வந்த பின், கடனை அடைப்பேன்.
இது போக, ஊர் பிரச்னைகளை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது, கோவில் காரியங்களை எடுத்துச் செய்வது, சுற்றுச்சூழல், கல்வி, தனிமனித ஒழுக்கம் குறித்து, பள்ளிகளுக்குச் சென்று இலவச பாடங்கள் நடத்துவதுடன், உயர் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துச் சொல்கிறேன். மேலும், நர்சிங்,என்ஜினியரிங் மாணவர்களை ஊக்கப்படுத்துவதுடன், என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.
நான் பணியில் இருக்கும் போது செய்த நற்காரியங்களை பாராட்டி, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். விருதுக்காக நான் எப்போதும் வேலை செய்தது இல்லை. என் மனசாட்சிக்காகவும், "நீயும் நாலு பிள்ளைகளை படிக்க வைக்கணும்' என்று, என் தாய் சொன்ன சொல்லுக்காகவும், முடிந்ததை செய்து வருகிறேன். இதை, என் ஆயுள் உள்ளவரை தொடர்ந்து செய்வேன்.
பெரியவர் ராமசாமி சொல்லி முடிக்கும் போது, வானம் இருண்டு, மழை பெய்ய ஆரம்பித்தது. "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை' என்பதற்கிணங்க, இந்த மழை, ராமசாமி என்ற நல்லார் பொருட்டு, எல்லாருக்கும் பெய்த மழையாகும்.

No comments:

Post a Comment