Pages

July 26, 2014

மக்கள் நல பணியாளர்கள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.

மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்களாக 13 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 13 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி சுகுணா விசாரித்து, 13 ஆயிரம் பேருக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் டிவிஷன் பெஞ்சு நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, மக்கள் நல பணியாளர்களுக்கு பணி வழங்க தேவையில்லை என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து மக்கள் நல பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் மீண்டும் புதியதாக விசாரிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கடந்த ஒருவாரமாக வாதாடினார். அவர் வாதாடும் போது, திமுக ஆட்சியில் மக்கள் நல பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் என்ற ஒரே காரணத்திற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பழிவாங்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 13 ஆயிரம் பேரை பணியை விட்டு அரசு நீக்கி உள்ளது. இதை ரத்து செய்யவேண்டும் என்றார்.தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.,மூர்த்தி, அரசு சிறப்பு வக்கீல் இன்பதுரை ஆகியோர் ஆஜராகி, மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடியாது என்பது அரசின் கொள்கை முடிவு என்றனர். இரு தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment